உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Monday, August 6, 2012

பிரச்சனைகளை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது எப்படி?

பெற்றோர்களில் இருவிதம் உண்டு. தங்கள் குழந்தைகளுக்கு எல்லாம் செய்து கொடுத்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பெற்றோர் முதலாவது வகை. முடிந்ததை செய்வோம், மற்றதை அவர்களாகவே அடைய வேண்டியது என்பதை கொள்கையாக வைத்துக் கொண்டு குழந்தைகளை இயன்ற வரை காப்பாற்றும் பெற்றோர் இரண்டாவது வகை. இதில் எது சரி என கேட்டால் இரண்டுமே தவறு என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாவற்றையும் செய்து கொடுத்து பாதுகாப்பாகவே வளர்த்தால் பின்னர் குழந்தைகள் தானாக எதையுமே செய்யும் திறமை இல்லாதவர்களாக வளர்ந்து விடுவர். எதையுமே கண்டு கொள்ளாமல் தானாகவே தெரிந்து கொள்ளட்டும் என விட்டால் எல்லாவற்றிற்கும் பயந்து கொள்பவர்களாக குழந்தைகள் வளர்வர். அதுவும் பிரச்சனைகளை எதிர்கொண்டு தீர்ப்பதில் திறமை இல்லாமல் வளர்வர்.

பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை வாய்ப்பது அரிது. எல்லோர் வாழ்க்கையுமே பிரச்சனைகளை கொண்டது தான். ஒரு பிரச்சனை தீர்வதற்குள்ளாகவே இன்னொரு பிரச்சனை தோன்றிவிடும். யார் தனக்கு ஏற்படும் பிரச்சனைகளை திறமையாக கையாண்டு அதை தீர்த்து விடுகிறார்களோ அவர்களே வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வதாக கொள்ளப்படுகிறது. எனவே நம் குழந்தைகளுக்கு பிரச்சனை தீர்க்கும் திறனை கற்றுக் கொடுப்பது அவசியம்.

சிக்கலைத் தீர்க்கும் திறன் ஒருநாளில் உருவாவதில்லை. வாழ்க்கையின் போக்கில் பல ஆண்டுகள் அனுபவத்தின் காரணமாகவே சிக்கலைத் தீர்க்கும் திறன் வளர்ச்சியடைகிறது. இந்த அடிப்படையில் பார்க்கும் போது இது போன்று பத்து நாட்கள் பயிற்சி செய்தால் சிக்கலைத் தீர்க்கும் திறன் வளர்ச்சி அடைந்து விடும் என்பது போன்ற குழந்தைகளுக்கு கற்றுத் தரும் விதமான பயிற்சிகள் உளவியலலில் எதுவுமே இல்லை. எதைக் கற்றுக் கொடுக்கிறோம் என்பதை சொல்லாமல் மறைநிலையில் மட்டுமே பிரச்சனைகளை தீர்க்கும் திறனை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க முடியும். பெற்றோர்கள் தங்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளை தீர்க்க முனையும் போது குழந்தைகளை அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தங்கள் பெற்றோர் எவ்வாறு பிரச்சனைகளை அணுகுகிறார்கள், என்னென்ன உத்திகளை பயன்படுத்துகிறார்கள், பிரச்சனைகளைத் தீர்க்க முடியாவிட்டால் என்ன செய்கிறார்கள். தேவைப்படும் போது உதவி கேட்டு பிறரை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பனவற்றை குழந்தைகள் பார்த்தும், அருகிலிருந்து கேட்டும் தெரிந்து கொள்வார்கள். இது அவர்கள் படிக்கும் செயல்முறைப் பாடம். வளர வளர பல பிரச்சனைகளை பெற்றோர் தீர்ப்பதைப் பார்க்கும் குழந்தைகள் ஒரு கட்டத்தில் வாழ்க்கையின் எல்லா பிரச்சனைகளையும் எவ்வாறு தீர்ப்பது என்பதை தெரிந்து கொள்வார்கள். ஆனால் பல பெற்றோர்கள், தங்களுக்கு பிரச்சனை ஏற்படும் போது குழந்தைகள் அருகில் இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறார்கள். பிரச்சனைகளினால் குழந்தைகளின் மனம் பாதிக்க்கப்படக் கூடாது என்ற எண்ணமே இதற்குக் காரணம். இவ்வாறு குழந்தைகளை பிர்ச்சனைக்குரிய சூழ்நிலைகளில் இருந்து அப்புறப்படுத்துவது அவர்கள் பிற்காலத்தில் பிரச்சனைகளைக் கண்டாலே ஓடி ஒளியும் நிலைக்கு அடிகோலும்.

ஒருசில குழந்தைகள் எவ்வளவு கற்றுக் கொண்டாலும் தனியாக ஒரு பிரச்சனையைத் தீர்க்கும் நிலை ஏற்பட்டால் தவிப்பிற்குள்ளாகிவிடுவர். அது போன்ற நிலை தங்கள் குழந்தைகளிடம் நிலவுவதாக பெற்றோர் நினைத்தால் அக்குழந்தைக்கு அருகிலேயே இருந்து பிரச்சனைகளை தீர்க்குமாறு தைரியம் அளிக்க வேண்டும். அச்சமயத்தில் எல்லா உதவிகளையும், மனரீதியான ஆதரவினையும் அளிக்க வேண்டும். ஓரிரு முறை பெற்றோரின் உதவியோடு சிக்கலைத் தீர்ப்பதில் வெற்றி காணும் குழந்தை தன்னால் சிக்கலைத் தீர்த்து விட முடியும் என்ற மன தைரியத்தை வளர்த்துக் கொள்ளும். விரைவிலேயே தனியாக பிரச்சனைகளை எதிர் கொள்ளும் திறமை அக்குழந்தையினிடம் தோன்றி விடும்.

பிரச்சனை வந்த பின் அதனைத் தீர்க்க முற்படுவதும் தீர்ப்பதும் திறமை. அத்திறமை வாய்க்கப் பெற்றாலே போதுமானது. ஆனால் தற்கால உளவியலில் சிறந்த ஆளுமையினர் பலரிடம் நடத்தப்ப்பட்ட ஆய்வுகளில் புதிய ஆளுமைப் பரிமானம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அது பிரச்சனை வருமுன்னே பிரச்சனைகளை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஆளுமைப் பண்பாகும். இவ்வாறு அடுத்த பிரச்சனை எப்போதும் வரலாம் என்று ஒன்றைத் தீர்த்து விட்டு அடுத்ததை எதிர்பார்த்து காத்திருக்கும் மனநிலை கொண்டவர்கள் எப்போது பிரச்சனை வந்தாலும் கலங்குவதில்லை. இவர்களிடம் அவசர காலத்தில் சிக்கலை எதிர்கொள்ளத் தேவையான கூடுதல் மன ஆற்றலும் காணப்படுகிறது. அதனால் எந்த பிரச்சனை எப்போது வந்தாலும் அதனை சுலபமாக முடித்துவிட்டு அடுத்ததை எதிர்கொள்ள காத்திருக்கிறார்கள். பெற்றோர் முதலில் இத்திறனை வளர்த்துக் கொண்டால் அது குழந்தைகளிடம் ஆளுமைப் பண்பாக உருவெடுத்து விடும்.

குண்டுக் குழந்தைகளின் உடல் எடையைக் குறைக்க அவர்களை நடைப்பயிற்சி செய்ய வைக்க வேண்டும். அதற்கு பெற்றோரும் குழந்தைகளுடன் நடக்க வேண்டும். மெதுவாக நடைப் பயிற்சி செய்ய ஆரம்பித்த உடன் படிப்படியாக நடையைக் அதிகப் படுத்த வேண்டும். சோதனை ஒன்றில் பெற்றோர் ஒருநாளைக்கு 2000 எட்டுக்களும் குழந்தைகள் 1000 எட்டுக்களும் நடையை அதிகப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இச்சோதனையில் எந்தெந்த பெற்றோர் 2000 எட்டுக்கள் நடையை அதிகப்படுத்தினார்களோ அவர்களின் குழந்தைகள் ஒருநாளைக்கு 2117 எட்டுக்கள் நடையை அதிகப்படுத்தி விரைவிலேயே தங்கள் எடையைக் குறைத்துக் கொண்டனர். சுறுசுறுப்பான பெற்றோர்களால் சுறுசுறுப்பான குழந்தைகளை உருவாக்க முடிந்தது.

எடைக்குறைப்பில் மட்டுமல்ல, சிக்கலைத் தீர்ப்பதிலும் அதுவே உண்மை. எப்போது வேண்டுமானாலும் பிரச்சனைகள் வரலாம். எதிர்பார்த்துக் காத்திருங்கள் உங்கள் குழந்தைகளோடு!

1 comments:

திண்டுக்கல் தனபாலன் August 6, 2012 at 6:28 PM  

விரிவான, விளக்கமான பகிர்வு... பாராட்டுக்கள்...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி...


என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP